கார்த்திகை பொரி


தேவையானப்பொருட்கள்:


அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடிசெய்தது - 2 கப்
பொட்டுகடலை - 1 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்


செய்முறை:


தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.


பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.


சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.


அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.


உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.


உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.


குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம். நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடலைக் கடைகளில் கிடைக்கும்.

Leave a Reply