கார்த்திகை அப்பம்


தேவையானப்பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:

1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.

மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலா
ம்



பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்
செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். 

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.



இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். 

இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்

கார்த்திகை பொரி

தேவையானப்பொருட்கள்:

அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடிசெய்தது - 2 கப்
பொட்டுகடலை - 1 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.

உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.

உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.

குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம். நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடலைக் கடைகளில் கிடைக்கும்.